தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி முழுமையான 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மேயர் ஜெகன் பொியசாமி பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மற்றும் மச்சாது நகர் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை துணை கழிவுநீர் ஏற்றும் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் ஏற்பட்ட குறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

மேயர் ஜெகன் பொியசாமி கூறியதாவது:

“மாநகராட்சி அதிகாரிகளும் அலுவலர்களும் தொடர்ந்து இந்த பகுதிகளை கண்காணிப்பதுடன், துணை கழிவுநீர் ஏற்றும் நிலையங்களில் மின் மோட்டார்கள் தொடர்ந்து இயங்கும். கடந்த காலங்களில் சில வார்டுகளில் மழைநீர் தேங்கி பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது 11 புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டதால் மழைநீர் கடலுக்கு செல்லும் வழி எளிதாக உள்ளது. சாதாரண மழை பெய்தால் நீர் 3 மணி நேரத்தில் கடலுக்கு செல்லும்.”

மேயர் மேலும் தெரிவித்தார்:

“மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் அடிப்படை பணிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. 16, 17, 18 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சில இடங்களில் தற்காலிக நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது; ஆனால் அதை வெளியேற்றும் பணிகள் விரைவில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்கின்றனர். எந்த குறைகளும் இருந்தால் மாநகராட்சி மற்றும் எனது நேரடி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.”

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்ப் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.