தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சிவன் கோவில் அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நேரில் பார்வையிட்டார்.

மாநகராட்சி சார்பில் தெப்பகுளத்தைச் சுற்றி நடைமேடை அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், முழுமையாக நிரம்பியிருந்த தெப்பகுளத்தின் நீரை வெளியேற்றியதின் விளைவாக மண்ணறிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தெப்பகுளத்தின் சுற்றுச் சுவர் சுமார் 6 அடி வரை உள்வாங்கி, மாநகராட்சி அமைத்த நடைபாதைக்கும் தெப்பகுளத்திற்கும் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், தூத்துக்குடி நகருக்கென்று தற்போது ஒரே ஒரு தெப்பகுளம் மட்டுமே உள்ளது. இத்தகைய பழமை வாய்ந்த தெப்பகுளத்தில் உரிய திட்டமிடலும், தொழில்நுட்ப ஆய்வும் இல்லாமல் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தண்ணீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மண்ணறிப்பு, சுற்றுச்சுவர் உள்வாங்கி பெரும் பள்ளம் உருவான நிலைக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வரும் தை மாதத்தில் தெப்பதிருவிழா நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெப்பகுளத்தின் பழமை மாறாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தெப்பத்திருவிழாவுக்கு முன் குளத்தை சீரமைத்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபாண்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் உடனிருந்தனர்.