தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களை தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், பொருட்கள் தயாரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகியவற்றில் சுத்தம், தரம், சரியான அடையாளம், காலாவதி தேதி, எடை மற்றும் விலை விவரங்கள் போன்ற சட்டப்பூர்வ நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் அருண் செய்தியாளர்களை சந்தித்து, “பண்டிகை காலங்களில் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடைபெறாதவாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். உணவுப் பொருட்களில் நிறமூட்டிகள், ரசாயனப் பொருட்கள் அல்லது தரமற்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்யும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

அவர் மேலும், “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்றிதழ் (FSSAI) பெற்றிருக்க வேண்டும். மக்கள் உணவு வாங்கும் போது பொருளின் லேபிள், காலாவதி தேதி போன்ற விவரங்களை அவசியம் கவனிக்க வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.