தூத்துக்குடி, டிசம்பர் 12:
தூத்துக்குடியில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

முகாமிற்கு என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தலைமைச் செயல் அதிகாரி கே. அனந்தராமானுஜம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் க. சுப்புலட்சுமி, கூடுதல் முதன்மை மேலாளர் (மனித வளத்துறை) சரவணன் மற்றும் துணை முதன்மை மேலாளர் பி.சி. ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ள எழுத்து உள்ளிட்ட பல்வேறு பார்வை குறைபாடுகள் கொண்டவர்களுக்கு விரிவான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையின் அடிப்படையில் 214 பேருக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், 53 பேருக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன.

மேலும் கண்புரை மற்றும் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் முழுமையாக இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முகாமின் ஏற்பாடுகளில் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்கள் 47 மற்றும் 57-ஐச் சேர்ந்த 54 மாணவிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் ச. ஸ்டெல்லா பாக்கியம், முனைவர் மு. புஷ்பகவல்லி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையின் கந்தசாமி ஆகியோர் சிறப்பான ஒருங்கிணைப்பை மேற்கொண்டனர்.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் ஏறத்தாழ 474 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளால் பயனடைந்தனர். பொதுமக்களின் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாம், சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.