தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) நுகர்வோர் மன்றத்தின் சார்பில் “நிலையான நுகர்வு நம் பொறுப்பும் நம் எதிர்காலமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (19.12.2025) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொறுப்புள்ள நுகர்வு நடைமுறைகள் மற்றும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதில் மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

நிகழ்ச்சி இறை ஆசிகளை வேண்டி தொடங்கியது. இதில் தலைமை விருந்தினராக மதிப்பிற்குரிய முனைவர் ஷைலா, வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர், வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், நிலையான நுகர்வு என்ற கருத்தை விரிவாக விளக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நெறிமுறை சார்ந்த நுகர்வு நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

மேலும், நீண்டகால நிலைத்தன்மையை அடைவதில் தகவலறிந்த நுகர்வோர் நடத்தையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மாடித் தோட்டம் அமைத்து சத்தான உணவுகளை உண்ண வேண்டும், தேவைக்கு அதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சிறப்புரை மாணவர்களுக்கு தகவல்களையும் ஊக்கத்தையும் வழங்கி, அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் பொறுப்புள்ள நுகர்வு பழக்கங்களை கடைபிடிக்கத் தூண்டியது.

இந்த நிகழ்ச்சி கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பர்னாந்து, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழில் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற மாணவிகள் சிறப்புற செய்தனர்.