மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் தமிழ் துறையும், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து பேச்சுப்போட்டியை நேற்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது.

இந்த போட்டியில் 13 மாணவிகள் பங்கேற்று, மகாகவி பாரதியார் எழுதிய கவிதைகள், தேசிய உணர்வு மற்றும் பெண்மையின் மேம்பாடு குறித்து தங்கள் உரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ரூபா, “பாரதியாரின் எழுச்சிமிகு பாடல்கள் சாதாரண மக்களையே விடுதலைப் போராட்டத்திற்குத் தள்ளியவை” என்று உணர்வுபூர்வமாக நினைவூட்டினார்.

சிறப்புரையாற்றிய தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன், “பாரதியார் இன்றைய இளைஞர்களை ‘அக்கினி குஞ்சுகள்’ என கண்டு, அவர்களிடம் மாற்றத்திற்கான தீக்கினத்தை எதிர்பார்த்தார்” என்று முக்கியமான கருத்தினைப் பகிர்ந்தார்.

நன்றி உரையாற்றிய புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து, மாணவிகள் நூலகங்களை பயன்படுத்தி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ் துறைத் தலைவி முனைவர் ஜோஸ்பின் ரேணுகா, முனைவர் ஜெயமலர், மின்னணு நூலகர் செல்வின், நியூட்டன், ரவி, குமிழ்முனை சைமன் உள்ளிட்டோர் சிறப்பாக பங்கேற்றனர்.