எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், பாஜகவின் மீனவர் பிரிவு மாநில அளவிலான மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீனவர் பிரிவு மாநில அமைப்பாளர் சீமா அகஸ்டல் தலைமை தாங்கினார். அணி மற்றும் பிரிவு மாநில பொறுப்பாளர் கே.டி.ராகவன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு பேச்சாளர்களாக தெற்கு மாவட்ட தலைவர் சிதரங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன், மீனவர் பிரிவு துணை அமைப்பாளர் சண்முகா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மீனவர் பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

மீனவர் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் பட்டியல் ஒரு வார காலத்தில் தொகுக்கப்பட வேண்டும்.

அரசு மீனவர்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் பற்றிய தொகுப்பு புத்தகம் 20 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.

மாநிலத் தலைவர் சுற்றுப்பயணத்தில் மீனவர் பிரிவு சுறுசுறுப்பாக பங்கேற்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக மீனவர் பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.

நவம்பர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படும் மீனவர் தினத்தை முன்னிட்டு ஏழு நாட்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

பொங்கலுக்குப் பின் மாநில அளவிலான மீனவர் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும்.

மாநில அளவிலான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் உற்சாகமாகவும், ஒற்றுமை மற்றும் வளர்ச்சி நோக்குடன் நடைபெற்றது.