அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தனது கட்சியின் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் சி.வி.சண்முகம், ‘தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும் — இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட வழங்குவார்கள்’ என்று கூறியிருப்பது மிகக் கீழ்த்தரமான, பெண்களை அவமதிக்கும் கூற்றாகும்.

இந்தக் கருத்து, அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது உள்ள வக்கிரத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்ல, அடிப்படையில் மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருந்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியாது; அவர் அரசியலில் எங்கேயும் காணப்படாதபடி அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்,” என அமைச்சர் கீதாஜீவன் கடுமையாக தாக்கியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதார தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பொறுக்காமல் பெண்களை அவதூறாகப் பேசுகின்றனர். திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்கு சிறப்பாக வளர்ந்து வருகிறது.

பெண்களை இழிவுபடுத்திய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு ஏராளமாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களை அவமதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் தக்கப் பதிலடி கொடுத்து பாடம் புகட்டுவார்கள்,” என அமைச்சர் கீதாஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.