சென்னை ஓட்டேரி பகுதியில், திருவி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக பகுதி மற்றும் கிளை கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் வகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை விட பெரிய சக்தி எதுவும் இல்லை. வருகிற மே மாதத்தில் திமுக கட்சியின் இடுப்பை உடைத்து உட்கார வைப்போம். திமுக ஒரு தடவை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வராது, அதுதான் அந்தக் கட்சியின் ராசி,” என்று சாடினார்.

அவர் மேலும் கூறியதாவது:
“தென் மாவட்டங்களில் கல்வியில் சாதி சீர்கேடு அதிகமாகியுள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. காவல்துறையினருக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மாதம்தோறும் கரண்ட் பில்லில் கை வைக்கும்போது ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து மக்கள் அவதி அடைகின்றனர். திமுகவினர் எவ்வளவு தவறு செய்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.”

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவர் நகைச்சுவை கலந்து கூறியதாவது:
“முதல்வர் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து பத்தாயிரம் கிராமங்களிடம் பேசுவதாக கூறுகிறார். ஆனால் கிராமங்களில் தேனும் பாலும் ஓடவில்லை. குடிநீர், சாலை, கழிப்பிட வசதியே இல்லை. முகம் கூசாமல் ஆட்களை செட் செய்து ‘கிராமங்கள் சிறப்பாக செயல்படுகின்றன’ என்று பேச வைத்துள்ளார். கேரள முதலமைச்சர் மிகவும் எளிமையாக இருக்கிறார். ஆனால் நம் முதலமைச்சர் மேக்கப் போட்டுக் கொண்டு பெண் பார்க்க வர மாதிரி வருகிறார். அவருக்கு 40 கார் கான்வெயில். திமுகவினரால்தான் மக்களுக்கு அச்சம் — இவர்களுக்கு யாரால் அச்சம்?” என சாடினார்.

அவர் மேலும் கூறியதாவது “பத்து ரூபாய் வசூல் செய்த செந்தில் பாலாஜி, பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார். இதையெல்லாம் தேர்தலில் பகிர்ந்தாலும் திமுகவுக்கு வெற்றி கிடையாது. மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள். ஒரு குடும்பத்தில் பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளனர்,” என்றார்.

இறுதியாக அவர் தீபாவளியை எடுத்துக்காட்டாக கூறினார் “வரம் கொடுத்த சிவன் தலையிலே கை வைத்த நரகாசுரன் ஒழிந்த நாள் தான் தீபாவளி திருநாள். அதேபோல மக்களுக்கு வரம் கொடுத்து ஏமாற்றிய நரகாசுர திமுக ஆட்சியை ஒழித்து, மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும்,” என ஜெயக்குமார் உறுதியுடன் தெரிவித்தார்.