தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.29 கோடி மதிப்பில் புதிய கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழும கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா இன்று (23.10.2025) நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் விழா நடைபெற்றது.

மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் சொர்ணலதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர், பனை மற்றும் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த குறுங்குழும கட்டிடம் உருவாகுவதால், பனைப்பொருட்கள் மற்றும் கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடும் சிறு தொழில்முனைவோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஊக்கமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.