தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பெருந்திரளாக திரண்டு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் நிறுவனரும், சமூக ஆர்வலருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரது கண்டன அறிக்கையில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆலைக்கு சீல் வைத்த பிறகும் அரசுக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பல லட்சம் ரூபாய்களை கையூட்டாக பெற்றுக் கொண்டு ஆலை திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆலையின் ஆதரவாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்களின் இந்த செயல் நீதிமன்றங்களின் உத்தரவுகளை அவமதிப்பு செய்வது. இதில் சில வழக்கறிஞர்களும் ஈடுபடுவது மிகவும் அபத்தமான செயல், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவது உச்சநீதிமன்றத்திற்கு எதிரான செயலாக உள்ளது.

உடனே தமிழக அரசு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு இன்று ஆலைக்கு ஆதரவாக சட்ட விரோதமாக திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். தூத்துக்குடி சமூக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக ஆதரவாளர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையானது ஆதரவாளர்களை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆலை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் நிறுவனரும், சமூக ஆர்வலருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதோடு ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.