தூத்துக்குடி நகரம் முழுவதும் நேற்று இரவு பெய்த கனமழையின் தாக்கத்தால், பழைய மாநகராட்சி அலுவலகம் (கிழக்கு மண்டல அலுவலகம்) சந்திப்பு, ஏ.வி.எம். மருத்துவமனை சந்திப்பு, பிரதான சாலையின் சில பகுதிகள் மற்றும் தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி துறையினருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்றுமாறு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார். மேலும், “மாநகர மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், வேகமாக பணிகளை நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மழை காரணமாக உருவான சிரமங்களைத் தடுக்க அனைத்து மண்டல அலுவலகங்களும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள், மழைநீர் வடிகால் வழிகளைக் களையவும், தாழ்வான பகுதிகளில் பம்ப் செட் மூலம் நீரை அகற்றவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி, “மழை காலங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நகரின் சுத்தம் மிக முக்கியம். அவசர பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.