தூத்துக்குடி. கடந்த 4 நாட்களாக பெய்த கன மழையால் தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், குறிப்பாக ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பெரும் அவதிப்பை ஏற்படுத்தியது.

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயபால் மாநகராட்சி மண்டல நிர்வாகத்திற்கு மனு அளித்து, “முழுமையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் நமது வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கும் முந்தைய புகாருக்கும் மண்டல அலுவலகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்து கொண்ட ஆணையர் ப்ரியங்கா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ராஜீவ் நகர் வடக்கு பகுதிக்கு மண்டல அலுவலக அதிகாரிகள் குழுவை அனுப்பி, ராட்ஷச மின் மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியை முன்னெடுத்தார். பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அவதியுற்ற நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது.

இதன் மூலம் அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு நன்றியை தெரிவித்தனர். பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அமைப்பின் தலைவர் எஸ்.பி.மாரியப்பன், அதிரடி நடவடிக்கைக்கும் ஆணையர் ப்ரியங்காவிற்கும் பாராட்டுப் பிரதி தெரிவித்தார்.