தூத்துக்குடி புதிய விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் என்று ஐ.என்.டி.யூ.சி பெருமாள் சாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் ஐ.என்.டி.யு.சி மாநில பொதுச் செயலாளருமான பெருமாள் சாமி பிரதமர் மோடி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

நமது முன்னோர்கள் மற்றும் பெரியவர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை வைக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியானாலும் சரி இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆனாலும் சரி அனைவரது விருப்பமும் இதுதான்.

1909 மற்றும் 1927 க்கு இடையில் ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சியின் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் குரூஸ் பர்னாந்து அவருக்கு ராகு பகதூர் பட்டம் அரசால் வழங்கப்பட்டது. முனிசிபாலிட்டி கட்டிடம் (ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து பில்டிங்) அவரது பெயரில் பெயரிடப்பட்டது.

தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டைக்கு தூத்துக்குடியில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி ஆட்சியில் இருந்து 1932 ஆம் ஆண்டில் ரூபாய் 18 லட்சத்து 23 ஆயிரத்து 275 செலவில் கூட்டு குடிநீர் வழங்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1925 மற்றும் 1926 ம் ஆண்டுகளில் திட்டத்தின் செலவுகள் ரூபாய் 27 லட்சத்து 83 ஆயிரத்து 765 ஆக அதிகரித்தன. இந்த தொகையை மானியமாகவும், கடனாகவும் பெற்று 1938 ஆம் ஆண்டு திட்டத்தை நிறைவு செய்தார். தூத்துக்குடி மக்கள் அப்போது குடிநீர் வசதி பெற்றனர்.

அவரது சிலைகள் நகராட்சி கட்டிடத்தின் முன்பும் தூத்துக்குடி நகரில் நடுவிலும் நிறுவப்பட்டுள்ளது. ஜாதி மதம் கடந்து காமராஜரை எப்படி வழிபடுகிறோமோ, அதே போல் இவரும் ஜாதி மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர் அவரது பெயரை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். இவ்வாறு பெருமாள்சாமி கதிர்வேல் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.