தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் பல்வேறு கோவில்களால் ஆன்மீக மகத்துவம் பெற்ற தெப்பக்குளம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 75 லட்சம் மதிப்பில் மெருகூட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதி மக்கள் கவலைக்குள்ளானார்கள்.

மரபு வழக்கப்படி ஆண்டுதோறும் தெப்பத்திருவிழாவை நடத்தி வரும் இத்தலத்தில், நீர் வீழ்ச்சி வசதியுடன் குளத்தை சுற்றிய நடைபாதைகள் மொத்தமும் நவீனமாக மாறும் வகையில் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், தெப்பக்குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நடைபாதைகள் சுமார் 6 அடி வரை திடீரென கீழே இறங்கி பெரிய விரிசல் ஏற்பட்டது. இதன் தாக்கம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து, அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் உடனடி ஆய்விற்காக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.

மின்சாரத்துறை அதிகாரிகளுடன் பேசி, மின்தடையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது

“பழமையின் மரபும், குளத்தின் இயல்பான வடிவமும் மாற்றமின்றி பாதுகாக்கப்படும். எந்த தவறும் இன்றி, தெப்பக்குளம் இருந்த வடிவமே மீண்டும் உருவாக்கப்படும். அதற்கான தெளிவான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

ஆய்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மின்வாரிய உதவி பொறியாளர் நாகராஜன், செயற்பொறியாளர்கள் பிரேம், தமிழ்செல்வன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மணி அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவுக்கு மத்தியில், மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதாஜீவனின் ஆய்வு தற்போது அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.