தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் வாராந்திர மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையேற்றார். மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா, துணை மேயர் செ. ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.

முகாமில் 15 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி, குடிநீர் இணைப்பு, கட்டிட அனுமதி, தொழில் வரி, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றியபோது,


“கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த முகாம்களில் 794 மனுக்களில் 770 க்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 மனுக்களும் விரைவில் தீர்வு பெறும். மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ரோச் பூங்கா கடற்கரை சாலை 8 கி.மீ நடைபாதை பணிகள் நிறைவடைந்துள்ளன; விரைவில் எதிர்புறப் பணிகளும் முடிவடையும்.

முத்துநகர் கடற்கரையில் உலகத் தரத்தில் நீச்சல்குளம் மற்றும் நீர்விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டபிள்யூஜிசி சாலையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குப்பைகளை மக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும்; பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். மாநகராட்சியின் தூய்மை முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” எனக் கூறினார்.


பின்னர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்செல்வன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.