தூத்துக்குடி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பை, டீ கப், தண்ணீர் கப், பிளேட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா ஆகியோரின் தலைமையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.

முதல்வரின் உத்தரவின்படி சுகாதாரப் பணிக்காக நியமிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட இளைஞர்–இளம்பெண்கள் கொண்ட சிறப்பு படை, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அவர்களின் ஆலோசனையின்படி இரவு நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டது.

சோதனை கிப்சன் புறம் பகுதியில் உள்ள மொத்த கடையில் நடைபெற்றது. அங்கு கடையின் மாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பை, டீ கப், தண்ணீர் கப், பிளேட் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்து, மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.

அதனைத் தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அருகிலுள்ள குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பெட்டி பெட்டியாகவும் பண்டல் பண்டலாகவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்திருந்தது. இதைக் கண்டு இளைஞர்–இளம்பெண்கள் படை அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முழு குடோனும் சோதனை செய்யப்பட்டு பத்து பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கடை பூட்டப்பட்டு சாவி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பும் இதே படை இரவு நேரத்தில் 500 கிலோ கேரி பைகளை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் ஆணையர் பிரியங்கா அவர்களின் வழிகாட்டுதலிலும், இளைஞர்–இளம்பெண்கள் படை காட்டும் இந்த தீவிரம் தூத்துக்குடி மாநகரை விரைவில் “பிளாஸ்டிக் விடுபட்ட நகரம்” ஆக மாற்றும் என நம்பப்படுகிறது.