தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில், டிசம்பர் 11ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் திரு. ஜே.இ. ஜான் டால்டன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் நேர மேலாண்மை மற்றும் இணையத்தின் பயனுள்ள பயன்பாடு பற்றிய தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ தலைமை உரையாற்றி, போட்டித் தேர்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கின்ஸ் அகாடமி நிறுவனர் திரு. எஸ். பேச்சிமுத்து அவர்களின் உறுதியான கல்விச் சேவையை மதிப்பளிக்கும் வகையில் ‘கல்வி சேவகர் விருது’ வழங்கப்பட்டது.

வர்சவ் அகாடமி, கின்ஸ் அகாடமி மற்றும் கணேஷ் ஐஏஎஸ் அகாடமி ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மூன்று அகாடமி நிறுவனர்களும் தங்கள் நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் வாய்ப்புகளை விளக்கினர்.

தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ஏ.எம். சோனல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.