தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்முயற்சியிலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட கலெக்டர் மற்றும் இணை இயக்குனர்களின் ஆலோசனையின்படியும், 2025–26 கல்வியாண்டிற்கான செங்கல்பட்டு மாவட்ட அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் செங்கல்பட்டு செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி கற்பகம் அவர்கள் தலைமையிலும் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்றது. போட்டிகளில் புக்கத்துறை தலைமை ஆசிரியர், செங்கல்பட்டு கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாகவும், வினாடி வினா நடுவர்களாகவும் பணியாற்றி, முழுமையான நேர்மையுடன் முடிவுகளை வழங்கினர்.

அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.
போட்டியில் பங்கு பெற்ற அலுவலர்களுக்கும், நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட அளவிலான போட்டிக்கான ஒருங்கிணைப்பையும், முழுமையான ஏற்பாடுகளையும் முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் கிருபாகரன் திறம்பட மேற்கொண்டார். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

போட்டிகள் அறிவியல் தொழில்நுட்பம், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல், திருக்குறள், பொது அறிவு, தேன்சிட்டு மற்றும் தினசரி நாளிதழ் ஆகிய தலைப்புகளில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றன.
மொத்தம் 8 வட்டாரங்களில் இருந்து 96 மாணாக்கர்கள் (48 அணிகள்) பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற 2 அணிகள் (மொத்தம் 4 மாணாக்கர்கள்) மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ், பயணப் படி, நடுவர்களுக்கான மதிப்பூதியங்கள் ஆகியவை போட்டி நாளிலேயே முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி கற்பகம் அவர்களால் வழங்கப்பட்டன.

அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணாக்கர்கள் மாநில அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.