தமிழக மின்வாரியத்தின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்ட விநியோக வட்டங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 20,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தீபாவளி கருணைத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“24 மணிநேரமும் பணியாற்றி, பேரிடர் காலங்களிலும் பெருந்தொற்று நாட்களிலும் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கருணைத் தொகை வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கிய நிலையில், அதே பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கூட வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுகிறது.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட போன்று, தற்போதைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி கருணைத் தொகை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், தேர்தல் வாக்குறுதி 153ஐ நிறைவேற்றும் நோக்கில் அக்டோபர் 17 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்த போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அனுமதி வழங்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளோம்” எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு அக்டோபர் 17ஆம் தேதிக்கான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, தமிழக அரசிடம் விரைவில் நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.