தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சி கிராம மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாமில் மனு அளித்த மக்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம், பொதுவிநியோக திட்டத்தில் பெயர் திருத்தம் போன்ற ஆணைகளை வழங்கினார்.

அத்துடன், வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண் இடுபொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமின் பயன்களை பெற்றனர்.