தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் 1020 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.85.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இணை இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
“பெண்கள் ஆண்களை சார்ந்து வாழ்ந்த காலம் கடந்துவிட்டது. இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெண்கள் சுயமாக தொழில் செய்து குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் நிலையை அடைந்துள்ளனர். கலைஞர் விதைத்த விதை இன்று பலனளிக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முன்னேற்றம் பெறுவதற்கு அனைவரும் முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்,” எனக் கூறினார்.

எம்எல்ஏ சண்முகையா, “திமுக ஆட்சி தான் பெண்களுக்கு பொற்காலம். பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பெண்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்,” என்றார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, “1989-ல் கலைஞர் தொடங்கிய சுயஉதவிக் குழு திட்டம், இன்று மீண்டும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வலுவாக முன்னேறுகிறது,” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், திமுக மாவட்ட, அணி, ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பல பெண்கள் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் முருகன் நன்றியுரை வழங்கினார்.