தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி, இன்று தொழில், வேளாண்மை, மீன்வளம், துறைமுகம் போன்ற துறைகளில் முன்னணியில் உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு நில ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் ஊடகங்களிடம் கூறியதாவது:

“மறைந்த எம்ஜிஆர் தலைமையில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிச்சாமி காலங்களில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கண்டது. ஆனால் தற்போது, ஆளுங் கட்சியைச் சேர்ந்த சிலரின் செல்வாக்கில், அதிகாரிகள் அரசு புறம்போக்கு இடங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது கவலைக்குரியது” என்றார்.

மீளவிட்டான் பகுதி-1 மற்றும் கோரம்பள்ளம் பகுதி-2 ஆகிய இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பல ஆண்டுகளாக நில ஒதுக்கீடு கோரி வந்த ஊடகத்துறையினரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த முறைகேடுகள் குறித்து கலெக்டர் இளம்பகவத் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும்” என முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வலியுறுத்தினார்.