தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையையடுத்து, பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், பி & டி காலனி, கோக்கூர் குளம், ஆதிபராசக்தி நகர், டீமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பி & டி காலனியில் வடிகால் மற்றும் மோட்டார் அறை வழியாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் கோக்கூர் குளம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. தூத்துக்குடி நகரம் முழுவதும் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் தற்போது மழை தணிவடைந்துள்ள நிலையில், நீர் தேங்கிய பகுதிகளில் நீர் விரைவாக வெளியேறி வருகிறது.

ஆதிபராசக்தி நகர் பகுதியில் முக்கிய மோட்டார் அறை வழியாகவும், பீமார்ட் பின்புறத்தில் துணை மோட்டார் அமைப்பும் மூலம் மழைநீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், டீமார்ட் எதிர்புறத்திலும் மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேயர், “மழை தற்போது குறைந்த அளவிலே பெய்து வருவதால், நீர் தேங்கி நின்ற பகுதிகள் விரைவாக வடியும் நிலையில் உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் இன்று இரவிற்குள் பெரும்பாலான பகுதிகள் வறண்டு விடும்,” எனத் தெரிவித்தார்.