தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய இடத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரியும் அல்லது இடத்தை உரிமையாளரிடம் திரும்ப வழங்க கோரியும் நாளை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெற்கு வீரபாண்டிய புரம், கிராம மக்கள் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

அப்போது கூறுகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தெற்கு விரபாண்டியபுரம், ஏ. குமரெட்டியபுரம், ஏ. குமரகிரி மக்களிடம் சுமார் 242 ஏக்கர் இடம் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தியது அந்த நிலத்திற்கு 2008 ம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாயும் 2010 ம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லட்சத்து 50 ஆயிரம் 2015 ம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சத்து 55 ஆயிரம் 2018 ம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 18 லட்சமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே அரசாணையின் மூலமாக கையகப்படுத்தப்பட்ட இடமாகும் இந்த இடத்திற்கு 6,50,000 இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு 2013 ம் ஆண்டு (31.10.2013) அன்று தூத்துக்குடி தனி வட்டாட்சியாளர் அலுவலகம் சிப்காட் அழகு 1 தூத்துக்குடி வட்டாட்சியாளர் சார்பாக பாதிக்கப்பட்ட இந்த இடம் கொடுத்த மக்களுக்கும் 6,50,000 இழப்பீட்டுத் தொகை வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்

அந்த கடிதத்தின் படி இன்று வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனவே அந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் அல்லது ஸ்டெர்லைட் அபிவிருத்திக்காக கையகப்படுத்தி இடத்தை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுத்த உத்தரவு ரத்து செய்து விட்டதால் அந்த நிலத்தை இடம் கொடுத்த மக்களுக்கே திருப்பி வழங்க வேண்டும் அல்லது நியாயமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வருகின்ற (4.8.2025) அன்று தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் வைத்து காத்திருக்கும் போராட்டம் நடத்துகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதோடு நாளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிப்காட் அருகில் கார் தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக தூத்துக்குடி வருகைதர இருக்கிறது. கிராம மக்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். உரிய இழப்பீடு வழங்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் சாமு. காந்தி, தெற்கு வீரபாண்டியபுரம் எம். கோபாலகிருஷ்ணன், ஏ. குமரெட்டியாபுரம் சொக்கலிங்கம், மணி (எ) பெருமாள் மற்றும் கிராமமக்கள் உட்பட ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம், தமிழ்நாடு தொழில் முனைவோர் வணிகர் வளர்ச்சி மையம் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.